Sunday, 22 July 2012

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!

நோன்பு : பகலே இரவாகி, இரவே பகலான விநோதம்!


ஆம்...சவுதியை பொறுத்த வரை ரமலான் வந்து விட்டால் பகல் இரவாகி விடும். இரவு பகலாகி விடும். 80 சதமான நபர்களுக்கு வேலை நேரமும் மாற்றலாகி விடும். என்னுடைய வேலை நேரமும் மாறி விட்டது. நோன்பு வைப்பதற்காக நடு நிசியில் 3 மணிக்கு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கெல்லாம் தொழுகைக்கு பள்ளிக்கு சென்று விடுவேன். தொழுது முடித்து அருமையான தூக்கம். அதன் பிறகு 11 மணிக்கு எழும்பி குளித்து விட்டு மதிய தொழுகைக்காக பள்ளிக்கு செல்வேன். அதன் பிறகு அலுவலக வேலை ஆரம்பம். 3 மணி 30 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பிறகு மாலை நேரத் தொழுகை. தொழுகை முடிந்து கணிணி முன்னால் உட்கார்ந்து சிறிது டைம் பாஸ். அதன் பிறகு நோன்பு திறக்க தயாராக வேண்டும். நோன்பு திறந்தவுடன் தொழுது விட்டு பிறகு ஒரு குட்டி தூக்கம்.

பிறகு இரவு தொழுகை. தொழுது முடித்து இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம். நடுநிசி 2 மணிக்கு வேலை முடியும். பிறகு சிறிது ஓய்வெடுத்து விட்டு சாப்பாடு. இது ரமலானின் எனது தொடர் வேலை. நோன்பின் களைப்பே தெரியாமல் பலருக்கு வேலை அமைந்திருக்கும். எனவேதான் நான் அதிகம் ரமலானில் சவுதியில் இருக்க பிரியப்படுவேன்.



ரமலான் வந்து விட்டால் பார்ட்டிகளுக்கும் குறைவிருக்காது. நோன்பு திறக்க தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து சிறந்த உணவு பதார்த்தங்களோடு பார்ட்டிகள் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த காணொளியில் நீங்கள் பார்ப்பது.





நோன்பு வைக்க முடியாத வயோதிகர்கள், நோயாளிகள் அதற்கு பகரமாக ஒரு நபருக்கு உணவு அளிக்கும்படி குர்ஆன் கூறுவதால் பலர் தங்களின் வாகனங்களில் 100, 200 பாக்கெட்டுகள் பிரியாணி மற்றும் பழங்கள் ஜூஸ் வகையறாக்களையும் சமோசாக்களையும் ஏற்றிக் கொண்டு பள்ளிகளில் தந்து விட்டு செல்வர். அரசாங்கமும் பள்ளிகளுக்கு நோன்பாளிகளுக்காக சாப்பாட்டை அனுப்பி வைக்கும். இது பல பள்ளிகளிலும் டென்ட்களிலும் நடக்கும். அதற்கு முன்னால் அழகிய முறையில் இஸ்லாமிய போதனைகள் நடைபெறும். மேலும் சவுதி இளைஞர்கள் உணவுகளை பரிமாறுவதில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்பர். சவுதி பெண்கள் வீடுகளில் சமைத்த உணவு பதார்த்தங்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பர். பள்ளிகள் அனைத்தும் தொழுகையாளிகளால் நிரம்பி வழியும். இரவு தொழுகையில் பெண்களும் பங்கு பெற அனைத்து பள்ளிகளிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பெண்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவர். தற்போது தமிழகத்திலும் பெண்கள் இரவு தொழுகைக்கு பள்ளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது.

எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற டென்ட்களில் தீவிரவாத பிரசாரம் நடக்கிறது. எனவே இதனை தடை செய்யுங்கள்" என்று மன்னரிடம் முன்பு கோரிக்கை வைத்தது. அதற்கான ஆதாரத்தை மன்னர் கேட்டார். ஆதாரம் தர இயலாது மூக்குடைபட்டனர் அமெரிக்க அதிகாரிகள்.

"நீங்கள் ஆதாரம் தரவில்லையாதலால் டென்ட்களை தடை செய்யவும் முடியாது" என்று மன்னர் மறுத்து விட்டார். எந்த நேரமும் இசையும், குடியுமாக இருக்கும் பல பிலிப்பைன் நாட்டவர் இஸ்லாத்தை ஏற்றவுடன் எவ்வளவு அழகிய வாழ்க்கை முறையை பேணுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.




ரமலானில் மெக்கா சென்று உம்ரா செய்தால் நன்மைகள் அதிகம் என்பதனால் இந்த மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அந்த நேரங்களில் கஃபாவை பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. இந்த காணொளியில் அதையும் பாருங்கள்.

பல இந்து கிறித்தவ நண்பர்கள் தாங்களாகவே விரும்பி ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்களோடு சேர்ந்து நோன்பிருப்பர். அது அவர்களுக்கு பெரும் மன நிறைவை கொடுப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். நோன்பில்லாத மாற்று மத சகோதரர்கள் யாரும் சொல்லாமலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட மாட்டார்கள். 95 சதவீத மக்கள் நோன்பிருப்பதால் அந்த சூழ்நிலையே அவர்களை மறைவாக சென்று சாப்பிட சொல்லும். சிறு குழந்தைகள் நோன்பிருக்கும் பொது அவர்களுக்கு முன்னால் பெரியவர்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் மனது பாதிக்கப்படும் என்பதாலேயே நோன்பாளிகளுக்கு முன்னால் சாப்பிட வெண்டாம் என்று மாற்று மத நண்பர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பகல் நேரங்களில் உணவகங்கள் அனேகமாக ஆட்கள் இல்லாததால் பூட்டப்பட்டிருக்கும். இரவில் விடிய விடிய வியாபாரம்தான்.



கஃபாவை சுற்றி இரவில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காணொளி!



சவுதியில் நோன்பு திறக்க வைக்கும் பதார்த்தங்களில் சமூசா முக்கிய இடம் பிடிக்கும். சேமியானும் முக்கிய இடத்தை பிடிக்கும். அது தயாரிக்கும் முறையை விளக்குகிறது இந்த காணொளி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.1894

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.

அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

எல்லோருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment