Sunday, 29 July 2012

நான் சாகத் தயார்.. ஆனா நீங்க என்ன சாகவிட மாட்டீங்கன்னு தெரியும் – அடுத்த நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

நாடகத்தில் இறங்கிய ஹஸாரே!

டெல்லி: லோக்பால் நாடகத்தின் அடுத்த பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர் அன்னா ஹஸாரேயும் அவரது கோஷ்டியினரும். கடந்த நான்கு தினங்களாக யாராலும் கண்டுகொள்ளப்படாததால், ஞாயிற்றுக்கிழமை தானே களமிறங்கினார் ஹஸாரே.
‘இந்த முறை நான் சாகத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு என்னை மக்கள் விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி அன்னாஹசாரேவும் அவரது கோஷ்டினரும் கோரி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இவருக்கு பலத்த ஆதரவு இருந்தது. ஆனால் இவருடன் உள்ளவர்களின் சுயநல நாடகங்கள், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் வெளிநாட்டு கார்ப்பொரேட்டுகளிடம் இவர்கள் வாங்கிக் குவித்த நிதி உதவி, சிறப்பு விருந்தினர் என்ற போர்வையில் தொண்டு நிறுவனங்களிடம் அல்பத்தனமாக அடித்த ரொக்கம்.. என எல்லாம் புரிய ஆரம்பித்த பிறகு மக்கள் ஆதரவு சுத்தமாகவே இல்லாமல் போனது.
அரசு நிறைவேற்றுவதாகக் கூறும் லோக்பால் மசோதாவை ஏற்க மறுத்துள்ள ஹஸாரே கோஷ்டி, அரசின் மொத்த கட்டுப்பாடும் தங்கள் வசம் இருப்பது போன்ற லோக்பால்தான் வேண்டும் என்று கூறிவருகின்றனர். குடிமைப் பணிகள் அனைத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முனைகிறது.
மூன்றாவது முறை மும்பையில் இந்த கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தபோது, மைதானமே ஈயோடிக் கொண்டிருந்தது. வெறுத்துப் போய் மூன்று நாள்களில் உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு போன இந்த கோஷ்டி, இப்போதுதான் மீண்டும் திரும்பியுள்ளது.
‘கல்யாண வீட்டில் இழவு கொட்டும்’ முயற்சியை பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற நாளில் உண்ணாவிரதத்தை அரங்கேற்றினர். ஆனால் ஒருவரும் சீந்தவில்லை.
அப்போது, முதலில் ஹஸாரே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  ஐபிஎல் சியர் லீடர் மாதிரி வந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘ஏன் வயதான ஹஸாரேவை துன்புறுத்துகிறார்கள். அவர்கள் கோஷ்டியில் உள்ள கேஜ்ரிவாலோ, கிரண் பேடியோ, பிரசாந்த் பூஷணோ உண்ணாவிரதமிருக்க வேண்டியதுதானே’, என்ற கேள்வியைத் தவிர்க்க, முதலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் உண்ணாவிரதம் என அறிவித்தனர்.
மிக சொற்ப கூட்டம்தான் வந்தது. உடனே, தங்களை காங்கிரஸ் தொண்டர்களை விட்டு தாக்கப் பார்ப்பவதாக புரளி கிளப்பிவிட்டார்கள். அப்படியும் ஒருவரும் வரக்காணோம்.
இப்படியே போனால், ரொம்பத்தான் காமெடி பீஸாகிவிடுவோம் என நினைத்த ஹஸாரே கோஷ்டி, பாபா ராம்தேவின் தயவை நாட, அவர் தனது அடியாள் படையுடன் மைதானத்துக்கு வந்து, கொஞ்சம் குரளி வித்தை காட்டிப் பார்த்தார்!
அப்படியும் கூட மீடியாவின் கவனம் இந்தக் குழுவினர் பக்கம் திரும்பவே இல்லை. இந்த நிலையில், அரசுக்கு தான் விதித்த 4 நாட்கள் கெடு முடிந்துவிட்டதாகவும், அப்படியும் அரசு கண்டுகொள்ளவே இல்லையே என்ற புலம்பலுடன், தானே களத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார் ஹஸாரே.
டெல்லி ஜந்தர் மந்தர் மைதான மேடையில் அமர்ந்து காலை 10.30 மணிக்கு உண்ணா விரதத்தைத் தொடங்கினார் (இடையிடையே தண்ணீர், குளுக்கோஸ் உண்டு). ஹஸாரேவும் களத்தில் குதித்ததால், விடுமுறை நாளில் இந்த நாடகத்தை வேடிக்கைப் பார்க்க கொஞ்சம் கூடுதலாக ஆட்கள் வந்திருந்தனர்.
பிரதமர் வீட்டு முன்பு…
இந்த நிலையில் திடீரென, எல்லோரும் ரேஸ் கோர்ஸ் சாலை செல்லுங்கள். அங்குதான் இனி போராட்டம் நடக்க வேண்டும் என்று ஹஸாரே கூற, சில ஆதரவாளர்கள் அந்த சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
சென்னையில் சிதம்பரம் வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்ற சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் சாவேன்… ஆனா மாட்டேன்!

தனது உண்ணாவிரத சீரியலின் இந்த பாகம் குறித்து ஹஸாரே பேசுகையில், “நான் இந்த முறை நிஜமாகவே சாகும் வரை உண்ணாவிரதமிருக்கப் போகிறேன். ஆனால் நான் சாக விரும்பினாலும் என்னை அந்த நிலைக்கு போக விடமாட்டார்கள் மக்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. லோக்பால் கிடைக்கும் வரை நீங்கள் என்னை சாகவிட மாட்டீர்கள்,” என்றார்.
உங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவில்லையே என்றபோது, கூடும் கூட்டத்தை வைத்து போராட்டத்தை எடை போடக் கூடாது என்றார். ஆனால் இதற்குமுன் நடந்த உண்ணாவிரதங்களில் கூடிய மக்கள் கூட்டத்தைக் காட்டித்தான் அரசை ஹஸாரே கோஷ்டி மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தற்போது குடியரசுத் தலைவர் ஆகிவிட்ட பிரணாப் முகர்ஜி உள்பட 15 மத்திய அமைச்சர்கள் மீது குற்றப்புகார் கூறிய ஹஸாரே கோஷ்டியினர், தங்களிடம் உள்ள அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாகக் கூறினர். ஆனால் பின்னர் அவற்றை பிரதமருக்கும், சோனியாவுக்கும் மட்டும் அனுப்பிவிட்டதாகக் கூறி அமைதியாகிவிட்டனர்!

No comments:

Post a Comment