Saturday, 23 February 2013

நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது பாம்பன் பாலம்



Vivek has a connection with Sanju
MORE VIDEOS
ராமேஸ்வரம் : நாளை (24ம் தேதி) பாம்பன் பாலம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது.  பாக்ஜலசந்தி கடலையும், மன்னார் வளைகுடா கடலையும் இணைக்கிறது பாம்பன் கடல். இதன் நடுவில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. பாம்பனில் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது. இதன் வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து உள்நாட்டு துறைமுகங்கள் மற்றும் இலங்கைக்கு போக்குவரத்து நடந்தது. ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர்க் கப்பல்கள் சென்று வந்தன.

கடந்த 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா  இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். பாம்பன் கடலிலும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர். இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையிலே கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் ''டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ்'' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.

அப்போது 229 லட்சம் செலவில் திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிகத்தொகை என்பதால் இத்திட்டமும் கைவிடப்பட்டது.
இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் ''டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்'' பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ்  அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதற்காக ஸீ70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்கியது.

கடந்த 1902 முதல் பாலம் கட்டுவதற்கான அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தினர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் 1913ல் கட்டி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த ''ஜெர்ஷர் லேடிங் கம்பெனி'' பொறியாளர் ஜெர்ஷர் என்பவரின் தலைமையில் 1913 ஜூலை மாதம் கப்பல் செல்லும் கால்வாயில் 124 அடி ஆழத்திற்கு இரண்டு தூண்கள் கட்டப்பட்டன. இதன் மேல் இரும்பினாலான இரண்டு லீப்கள் பொருத்தி தூக்கு பாலம் கட்டும் பணி டிசம்பரில் முடிக்கப்பட்டது. 1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி  தலைமன்னார் கப்பல் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அன்று முதல் சென்னையிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் நேராக தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று வரத்துவங்கினர்.

சரக்கு போக்குவரத்தும் இவ்வழியாகவே நடந்தது. இதன் மூலம் தனுஷ்கோடி மிகப்பெரும் துறைமுக நகராக உருவெடுத்தது. கடந்த 1964 டிசம்பர் 23ம் தேதி தனுஷ்கோடி புயலில் பாம்பன் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் கப்பல் செல்வதற்கு வழிவிடும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. புயலுக்குப்பின் தென்னக ரயில்வே பாலங்கள் பராமரிப்புத்துறை இன்ஜினியர் ஸ்ரீதரன் தலைமையில் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. மீண்டும் 1965 மார்ச் 1 ல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

2006ம் ஆண்டு ஜூலையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே முதன்மை இன்ஜினியர் ஏ.கே.சின்ஹா தலைமையில் அகல ரயில் செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 ஆகஸ்டு 12ல் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. நடுக்கடலில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் பாம்பன் பாலம் 99 ஆண்டுகளை முழுதாக கடந்தும் தனது சேவையை கம்பீரமாக தொடர்கிறது.

பிப்ரவரி 24ம் தேதி நூறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பாம்பன் பாலத்தை மத்திய அரசு இந்திய புராதான சின்னமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நூற்றாண்டு விழாவை கொண்டாடவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட உள்ள சம்பவங்களில் பாம்பன் பாலமும் இடம்பெறும் என்பது மட்டும் உறுதி.

2,200 டன் எஃகால் உருவானது

* 1645 மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், ராமநாதபுரத்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சடையக்கத்தேவர் மீது போர் தொடுத்தார். அப்போது ராமேஸ்வரம் தீவில் சேதுபதியும், அவரது தளபதிகளும் தஞ்சமடைந்தனர். அவர்களை சிறைபிடிக்க நாயக்கர் மன்னரின் தளபதி தளவாய் ராமப்பையன் முதன் முதலாக பாம்பன் கடலில் கற்பாறைகளால் பாலம் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
* கடலுக்குள் 146 தூண்களுக்கு மேல் அமைந்துள்ள பாலத்தை கட்டுவதற்கு 4 ஆயிரம் டன் சிமென்ட், 1 லட்சத்து 36 ஆயிரம் கனசதுர அடி களிமண், 18 ஆயிரம் கனசதுர அடி கற்கள், 1 லட்சத்து 3 ஆயிரம் கனசதுர அடி மணல், 80 ஆயிரம் கனசதுர அடி பெரிய பாறைகள், 2,200 டன் எஃகு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கப்பல் செல்லுவதற்கு பாம்பன் துறைமுக அலுவலர், மண்டபம், பாம்பன் ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து இசைவு தெரிவித்தால் பாலம் திறக்கப்படும். 58 கி.மீ வேகத்திற்கு மேல் காற்றடித்தால் தானியங்கி சிக்னல் செயல்பட்டு பாலத்தில் ரயில் செல்வதற்கான அனுமதி கிடைக்காது.
* அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளில் இந்திய ரயில்வே இன்ஜினியர்கள் 50 பேர் உட்பட 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கப்பல் செல்லும் ஜெர்ஷர் பாலத்திற்கு மட்டும் வலுகூட்டுவதற்காக புதிதாக 700 கிலோ எடை 10 மீட்டர் நீளமுள்ள 95 இரும்பு பிளேட்டுகள், 32 ஆயிரம் ரிவிட்டுகள் பயன்படுத்தப்பட்டது. அகல ரயில் செல்லும் பாலமாக மாற்றுவதற்கு மொத்த செலவு ஸி50 கோடி.
* 1964ல் பாம்பன் பாலங்கள் பராமரிப்பு செக்ஷன் இன்ஜினியராக பணியாற்றிய குமார சாமி புயல் அடித்தநாளில் தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலுக்கு பைலட்டாக சென்றார். அப்போது புயலில் சிக்கி ரயிலுடன் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு பலியானார். தற்போது பாலங்கள் பராமரிப்பு பணியில் பொறியாளர்கள் உட்பட 20 பேர் பணியாற்றி வருகின்றனர். பால பராமரிப்பு செலவு ஆண்டிற்கு ஸி2 கோடி ஆகிறது.
* நூற்றாண்டு ஆகியும் பாம்பன் கடலில் கம்பீரமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கும் பாம்பன் பாலத்தில் 13.1.2012ல் கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மோதியதில் பாலத்தின் 121வது தூண் சேதமடைந்தது. இதனால் ஏழு நாட்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பாம்பன் பால வரலாற்றில் முதல் விபத்து சம்பவமாகும்.

Tuesday, 19 February 2013

விழித்துக்கொண்ட ரஷ்யா : இனி எரிகல் விழும் முன்னே தடுப்பதற்கு புதிய திட்டம்


பூமியில் மிக அரிதாக நிகழும் இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான எரிகற்களின் தாக்கம் கடந்த வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில்  நிகழ்ந்ததை அனைவரும் அறிவார்கள்.
 இவ் விண்கல் விழும் போது ஏற்பட்ட அதிர்ச்சியலைகள் (Shock waves) காரணமாகப் பல கட்டடங்களின் யன்னல் கண்ணாடிகளும் சிலவற்றின் கூரைகளும் உடைந்து தெறித்ததில் 1200 பேர் வரை காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிகல்லின் தாக்கம் கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய எரிகல் தாக்கம் ஆகும். இதையடுத்து ரஷ்யா எரிகற்களின் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம் (anti-meteorite shield) ஒன்றை நடைமுறைப் படுத்தும் திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்துக்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் விஞ்ஞானக் கழகம் மற்றும் வானியல் கல்வி மையத் திணைக்களத்தின் தலைவரான லிடியா ரைகோல்வா எனும் பெண்மணி கருத்து உரைக்கையில், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் எரிகற்களின் பாதையைத் திருத்தமாகக் கண்காணிப்பதற்குப் பூமியின் தரையில் அமைக்கப் பட்டுள்ள மிகுந்த பார்வை வலுவுடைய தொலைக் காட்டிகளை விட விண்ணில் இத்தொலைக் காட்டிகளை அமைக்கும் ஒரு தளத்தை நிர்மாணிப்பதே அவசியமாகின்றது என்றார்.

இவர் மேலும் கூறுகையில் இந்த செயற்திட்டம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகமான ரொஸ்கொஸ்மொஸ் (Roscosmos) இனாலும் துணைப் பிரதமர் டிமித்ரி ரொகோஷின் ஆலும் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை லிடியா வெள்ளிக்கிழமை ரஷ்யாவைத் தாக்கிய விண்கல் குறித்தும் தகவல் அளித்திருந்தார். இதில் அவர் இந்த எரிகல் விண்ணிலேயே வெடித்துச் சிதறாமல் தரையில் மோதியிருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய வெடிப்பு 500 கிலோ டன் நிறையுடைய TNT வெடிபொருளுக்குச் சமனாகும் எனவும் இது சக்தி வாய்ந்த ஒரு அணுகுண்டுக்கு இணையான சேதத்தை விளைவித்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வெள்ளிக்கிழமை ரஷ்யாவைத் தாக்கிய எரிகல்லின் சில சிதைந்த பாகங்களை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த எரிகல் 7 மிகப்பெரிய துண்டுகளாக உடைந்து செபார்க்குல் ஏரியில் வீழ்ந்ததாக இனங் காணப்பட்டுள்ளது.

Sunday, 17 February 2013

துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகும் அளவைத் திருத்தமாக கணிக்கத் திணறி வரும் நிபுணர்கள்


கடந்த சில வருடங்களாகப் புவியியலாளர்கள் துருவப் பகுதிகளில் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வொன்று மேற்கொண்டனர்.
இதன் மூலம் புவி வெப்ப அதிகரிப்புக் காரணமாக துருவப் பகுதிகளில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி கடந்த இரு தசாப்தங்களில் (20 வருடங்கள்) மட்டும் உலகம் முழுதும் கடல் நீர் மட்டம் 11 mm மில்லிமீற்றர் அதிகரித்துள்ளது என அவர்கள் கணித்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக சுமார் 20 துருவப் பகுதி ஆய்வாளர்களைக் கொண்டுள்ள குழுக்கள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வட துருவத்துக்கு அண்மையில் உள்ள பெரும் நிலப்பரப்பான கிறீன்லாந்து மற்றும் தென் துருவமான அந்தாட்டிக்கா ஆகிய பிரதேசங்களில் உள்ள பனிப் படிமங்களின் (Ic sheets) தன்மை மற்றும் அளவு குறித்த திருத்தமான அளவீடுகளைப் பெறுவதற்கு முயன்று வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் கிடைத்த முடிவுகளில் பெரும்பான்மையானவை  உறுதியானதாகவோ அல்லது நம்பத்தகுந்ததாகவோ இல்லை என்பது துரதிர்ஷ்டமானது.

இந்நிலையில் நிகழ்காலத்தில் புவியியலாளர்கள் எதிர் நோக்கும் மிக அழுத்தமான கேள்விகளில் ஒன்றாக கடல் நீர் மட்டம் எந்தளவு மற்றும் எவ்வாறு அதிகரிக்கின்றது எனும் கேள்வி விளங்குகின்றது. துருவப் பகுதிகளில் உறைந்துள்ள பாரியளவான பனிக்கட்டிகள் உலகம் முழுதும் கடல் மட்டம் அதிகரிக்கத் தேவையான அடர்த்தி மிக்க கொள்வனவை உடையன. இவை மிகப் பெருமளவு உருகினால், சிறு சிறு தீவுகள் முழுமையாகக் கடலில் மூழ்கும் அபாயமும், உலக முழுதும் கடலோர நகரங்களும் அங்கு வாழும் சமூகங்களும் பாதிக்கப்படும் அபாயமும் தோன்றும்.

இதேவேளை துருவப் பகுதிகளிலும் கிறீன்லாந்திலும் உறைந்துள்ள பனிப்பாறைகளில் உருகும் நிலையிலுள்ள பனிப் படிமங்கள் (Ice sheets or Polar ice caps) எந்தளவு இருக்கின்றன என்பதைத் திருத்தமாகக் கணிப்பதற்கு காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தும் செய்மதிகளுக்கே சவாலான விடயமாகும். இந்நிலையில் கிளேசியர் எனும் பனிச்சறுக்கு அனர்த்தம், பனிப்பாறைகளின் மேற்பரப்பு அவற்றின் மீதான ஈர்ப்பு விசைகளின் தாக்கம் மற்றும் பனிப்படிமங்களின் மாற்றம் என்பவை குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா (Nasa) மற்றும் ஐரோப்பாவின் ஈசா (Esa) ஆகிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

பூரணமதுவிலக்கை அமல்படுத்தி நாளை நடைபயணம் தொடங்குகிறார் வைகோ

சென்னை: தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபயணத்தை தொடங்குகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி நெல் மாவட்டம் உவரியிலிருந்து மதுரை வரை வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் தொடங்கி மறைமலை நகர் வரை மொத்தம் 11 நாட்களுக்கு 250 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
நாளை கோவளத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் விழாவில் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் விழா நடைபெறுகிறது. துணைப் பொதுச்செயலாளர் மல்லை. சத்யா, கழகப் பொருளாளர் டாக்டர். ரா. மாசிலாமணி, நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி உள்ளிட்ட ஏராளமான மதிமுகவினர் பங்கேற்கின்றனர்.
இந்த நடைபயணம் கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், புதுப்பட்டிணம், திருக்கழுங்குன்றம், ஊர்களின் வழியாக சென்று 28ம் தேதி மறைமலை நகரில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார்.
இன்னும் இரண்டு நடைபயணம்
இதேபோன்று ஏப்ரல் 9ந் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி 20ந் தேதி ஈரோடு வரைக்கும், ஜூன் மாதம் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கி 30ந் தேதி கடலூர் வரைக்கும் இரண்டு கட்டமாக நடைபயணம் மேற்கொள்கிறார் வைகோ

Saturday, 16 February 2013

World Press இன் 2012ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த புகைப்படங்கள்


2012 க்கான World Press Photo போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் இவை. புகைப்பட ஊடகவியல் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கான தகுதிகள் என்ன என அழுத்தமாக சொல்கின்றன இப்புகைப்படங்கள்.
Visual Journalism இல் சிறந்து விளங்கும் நடுவர் குழுவினரால் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் இவ்வருடம் முழுவதும் 45 நாடுகளில் கண்காட்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. மிகச்சிறந்த புகைப்பட ஊடகவியலை கொண்டு,  உலகின் உண்மையான யதார்த்த நிலையை புரிந்து கொள்ளவைப்பதே எங்களது இலக்கு என்கிறார்கள் வெற்றி பெற்றவர்கள்.  பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற சில முக்கிய புகைப்படங்கள் கீழே தரப்படுகின்றன.

2012 ம் வருடத்திற்கான Word Press புகைப்படமாக இப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் எரிகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இரு வயது சிறுமியும், அவரது மூன்று வயது சகோதரனையும், இறுதிச்சடங்குக்காக பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இத்தாக்குதலில் இக்குழந்தைகளின் தந்தையும் பலியாகிவிட்டார். அவர்களது தாயார் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.


விளையாட்டு பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது. இந்தோனேசியாவில் நடைபெறும் மாடுகளின் ஓட்டப்போட்டியில் எடுக்கப்பட்டது

இயற்கை பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது

Contemporary பிரிவில் முதலிடம் பெற்ற புகைப்படமிது. கென்யாவின் நைரோபியில் குப்பைகளை பொறுக்கும் பெண்மணி ஒருவர் அங்கு சில புத்தகங்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.




Tuesday, 12 February 2013

சிரியாவின் மிகப் பெரிய அணை மற்றும் விமான தளத்தை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை


சிரிய கிளர்ச்சிப் படை சமீபத்தில் சிரியாவின் வடக்கேயுள்ள இராணுவ விமானத் தளத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த சில நாட்களில் பெறப்பட்ட மிக முக்கிய போர் வெற்றி இது எனவும் அறிவித்துள்ளது.
இதன் தொடர்பாக பிரிட்டனைப் பின்னணியாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துல்-ரஹ்மான் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் :

சிரிய கிளர்ச்சிப் படை அதன் போராட்டத்தின் உச்சக் கட்டமாக சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது சிரியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள அலெப்போ நகரில் அமைந்திருக்கும் அல்-ஜர்ராஹ் இராணுவ விமானத் தளத்தை அரச படைகளுடன் கடுமையாகப் போராடி கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக சிரிய எல்லைகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சிப் படை கைப்பற்றி வந்துள்ளது. மேலும் இவற்றை மீட்பதற்காக இராணுவத்துக்கும் கிளர்ச்சிப் படைக்குமிடையே கடும் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கிளர்ச்சிப் படை ரக்னா மாகாணத்தில் உள்ள யூப்ரடீல் ஆற்றின் மீது கட்டப் பட்டிருக்கும் சிரியாவின் மிகப் பெரிய அணையையும் கைப்பற்றியுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் மூலம் ஒரு நாளைக்கு 880 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இம்மின் உற்பத்தி நிலையம் மூலமே சிரியாவின் பெரும்பாலான மின் தேவை பூர்த்தி செய்யப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அணை மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தால் அணை உடைந்து அருகிலுள்ள கிராமங்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. இதேவேளை சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளும் தாக்குதல்களும் அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் ஆகியவற்றுக்கும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும் சிரியாவில் இருந்து துருக்கியை இலக்கு வைத்து ஏவப்படும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தக் கூடிய ஏவுகணை எதிர்ப்புக் கவசங்களையும் மற்றும் அவற்றை இயக்கும் பயிற்சி பெற்ற சில படையினரையும் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நோட்டோவின் உறுப்பினரும் தமது நட்பு நாடுமான துருக்கிக்கு அனுப்பியுள்ளன.

உலகில் மிகவும் குளிர்மையான பிரதேசம் - சராசரி வெப்பநிலை - 50C


ரஷ்யாவில் அமைந்துள்ள ஓய்மைக்கோன் (Oymyakon) எனும் கிராமமே மக்கள் குடியேறி வாழும் உலகின் மிகக் குளிரான கிராமம் ஆகும்.
அங்கு இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சராசரி வெப்பநிலையாக -50C பதிவாகியுள்ளது. மேலும் இங்கு மிகக் குறைந்த வெப்பநிலையாக -71.2C பதிவாகியுள்ளது. அதி கூடிய குளிரின் காரணமாக இக்கிராமம் 'Pole of Cold' என அழைக்கப்படுகின்றது.

இக்கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 750m உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு டிசம்பரில் பகல் பொழுது வெறும் 3 மணித்தியாலங்களுக்கும் அதிக பட்சமாக கோடை காலத்தில் 21 மணித்தியாலங்களும் நீடிக்கின்றது. இங்கு மக்கள் தொகை வெறும் 500 பேராகும். மேலும் கடும் குளிரினால் உணவுக்கு அவசியமான மரக்கறிகள் என எதுவும் இங்கு விளைவதில்லை. எனவே குளிரைத் தாக்குப் பிடிப்பதற்காக இவர்களின் முக்கிய உணவாக Reindeer எனப்படும் கலைமான் மற்றும் குதிரைகளின் இறைச்சி விளங்குகின்றது. இருந்த போதும் இவர்கள் போசாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப் படுவதில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும்.

இவ்வளவு குளிர் நிறைந்த இக்கிராமத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இங்குள்ள பல வீடுகளின் கழிப்பறையும் குளியலறையும் வீட்டுக்கு வெளியே ஹீட்டர் பூட்டப் படாமல் அமைந்துள்ளன. சில குடிமக்கள் தமது காரை நாள் முழுதும் ஸ்டார்ட்டிங்கிலேயே வைத்துள்ளனர். இதற்குக் காரணம் ஒரு தடவை இது நிறுத்தப் பட்டால் மறுபடி ஸ்டார்ட் ஆவது சந்தேகத்துக்குரியது என்பதனால் ஆகும்.

மேலும் ஒருவர் மரணமடைந்தால் அவரை எரிப்பதற்குக் குழி தோண்ட 3 நாட்கள் எடுக்கும் எனவும் இதற்குக் காரணமாக தோண்டப் படும் நிலத்தில் விறகுகள் மூலம் சிதை உருவாக்கி எரிய வைக்க நேரம் தேவைப்படும் எனவும் கூறப்படுகின்றது.

தினம்தோறும் கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம் : கோலா நிறுவனம் கைவிரிப்பு


நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.
இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர் அதிகளவு கொக்கா கோலா உட்கொண்டமையே என இப் பெண்மணியின் உடலைப் பரிசோதித்த பிரேத பரிசோதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதாவது மனித உடலில் சேரக் கூடிய காஃபின் (Caffeine) ஐ விட இரு மடங்கும், நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவை விட 11 மடங்கும் இவர் உடலில் சேர்ந்தமையாலேயே இருதயப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பிள்ளைகளின் தாயான இவர் உடல் நலக் குறைவால் பல வருடங்களாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இவரின் மரணத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது, ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கோலா குடித்ததால் அவரது உடலில் 1Kg சர்க்கரையும், 970mg caffeine உம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் கொக்கோ கோலா நிறுவனம் சமீபத்தில் தனது உற்பத்தியான கோலா தான ஹாரிஸ் இன் மரணத்துக்குக் காரணம் என யாராலும் 100% வீதம் நிரூபிக்க முடியாது என மறுப்புரை தெரிவித்துள்ளது. மேலும் தனது பானத்தை அளவுக்கதிகமாக உட்கொண்டு அதற்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புக்குத் தனது நிறுவனம் பொறுப்பாக முடியாது எனவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது எனவும் தடாலடியாகத் தெரிவித்துள்ளது.