Tuesday, 12 February 2013

சிரியாவின் மிகப் பெரிய அணை மற்றும் விமான தளத்தை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை


சிரிய கிளர்ச்சிப் படை சமீபத்தில் சிரியாவின் வடக்கேயுள்ள இராணுவ விமானத் தளத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த சில நாட்களில் பெறப்பட்ட மிக முக்கிய போர் வெற்றி இது எனவும் அறிவித்துள்ளது.
இதன் தொடர்பாக பிரிட்டனைப் பின்னணியாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துல்-ரஹ்மான் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் :

சிரிய கிளர்ச்சிப் படை அதன் போராட்டத்தின் உச்சக் கட்டமாக சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது சிரியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள அலெப்போ நகரில் அமைந்திருக்கும் அல்-ஜர்ராஹ் இராணுவ விமானத் தளத்தை அரச படைகளுடன் கடுமையாகப் போராடி கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக சிரிய எல்லைகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சிப் படை கைப்பற்றி வந்துள்ளது. மேலும் இவற்றை மீட்பதற்காக இராணுவத்துக்கும் கிளர்ச்சிப் படைக்குமிடையே கடும் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கிளர்ச்சிப் படை ரக்னா மாகாணத்தில் உள்ள யூப்ரடீல் ஆற்றின் மீது கட்டப் பட்டிருக்கும் சிரியாவின் மிகப் பெரிய அணையையும் கைப்பற்றியுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் மூலம் ஒரு நாளைக்கு 880 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இம்மின் உற்பத்தி நிலையம் மூலமே சிரியாவின் பெரும்பாலான மின் தேவை பூர்த்தி செய்யப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அணை மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தால் அணை உடைந்து அருகிலுள்ள கிராமங்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. இதேவேளை சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளும் தாக்குதல்களும் அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் ஆகியவற்றுக்கும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும் சிரியாவில் இருந்து துருக்கியை இலக்கு வைத்து ஏவப்படும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தக் கூடிய ஏவுகணை எதிர்ப்புக் கவசங்களையும் மற்றும் அவற்றை இயக்கும் பயிற்சி பெற்ற சில படையினரையும் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் நோட்டோவின் உறுப்பினரும் தமது நட்பு நாடுமான துருக்கிக்கு அனுப்பியுள்ளன.

No comments:

Post a Comment