நம் கீழக்கரை நகரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வடக்கு தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேட்டில் ஆண்டுதோறும் கண்காட்சி திடல் அமைக்கப்படும். இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இராட்டினம், உணவு விடுதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாமான்கள் கடைகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். இந்த கண்காட்சித் திடல் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த வருடமும் வழக்கம் போல் மணல்மேடு பகுதியில் கண்காட்சி துவங்கியது. இந்த மக்கள் கூடும் பகுதியில், குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கோடு, கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த யூத் எக்ஸனோரா அமைப்பினர்கள், திரையில் ஒளிரும் வண்ணம் விழிப்புணர்வு காணொளி (வீடியோ) காட்சிகளை திரையிட்டு வருகின்றனர். இந்த வீடியோ காட்சியில் நகராட்சி கமிஷனர், நகராட்சிச் தலைவர், பெரும்பாலான கவுன்சிலர்கள், பல்வேறு ஜமாஅத் அமைப்புகளின் நிவாகிகள், பொது நல அமைப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலர், சிறப்பாக பேசியுள்ளனர்.
முக்கியமாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை வீட்டிலேயே எப்படி பிரித்து கொடுப்பது ? நம் கீழக்கரை நகரை குப்பைகள் இல்லாத நகரமாக எப்படி மாற்றுவது ? குப்பைகளால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன ? இவைகளை எப்படி எதிர் கொள்வது? நிரந்தர தீர்வுகள் யாவை ? போன்ற கேள்விகளுக்கு முக்கியஸ்தர்கள் பலரின் உரையில் விடை கிடைக்கிறது. இதனை ஏராளமான பொது மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து செயலாற்ற உறுதி மொழி எடுத்துள்ளனர். இந்த நல்ல முயற்சிக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



No comments:
Post a Comment