Tuesday, 28 August 2012

கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் கீழக்கரை!

கீழக்கரை, : கீழக்கரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை ஒடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக கீழக்கரை நகரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலின் அட்டூழியம் பெருகி வருகிறது. வறுமையில் நலிந்த நடுத்தர குடும்பங்களை குறிவைத்து கடன் தருவதாக கந்துவட்டி கும்பலும், சொத்து தகராறு, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு போன்ற விவகாரங்களை தேடிப்பிடித்து பிரச்னையை தீர்ப்பதாக கட்டப்பஞ்சாயத்து கும்பலும் களத்தில் இறங்கி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கும்பலிடம் சிக்கிக் கொண்டு சொத்து, வீடு, அந்தஸ்தை இழந்து பரிதவிக்கும் அப்பாவிகள் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த அசில் என்பவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு கூட, கீழக்கரையில் ஒரு சம்பவம் நடந்தது. ஓராண்டுக்கு முன்பு ஒருவர், குடும்பச்சூழல் காரணமாக தனது வீட்டை ரூ.2.50 லட்சத்திற்கு கந்துவட்டி கும்பலிடம் அடமானம் வைத்துள்ளார். ஓராண்டு முடிவில் வட்டியுடன் ரூ.3.50 லட்சமாக கடன்தொகை உயர்ந்தது. அதனை கொடுத்து வீட்டை மீட்க முயன்றார் அந்த நபர். வீட்டை கொடுக்க முடியாது என கந்துவட்டி கும்பல் மிரட்டியது. இதனையறிந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், பாதிக்கப்பட்ட நபரை அணுகி, எங்களுக்கு ரூ.50ஆயிரம் கொடுத்து விடுங்கள். பிரச்னையின்றி வீட்டை மீட்டுத்தருகிறோம் என்றனர். அந்த பணத்தையும் வேறொரு இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி கட்டி வீட்டை மீட்டுள்ளார். இதனால் வீட்டு உரிமையாளருக்கு வீட்டை மீட்க ரூ.4 லட்சம் செலவானது. இதுபோன்று வாரம் ஒரு சம்பவம் நடந்து வருகிறது‘ என்றார்.
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி முகைதீன் இப்ராகிம் கூறுகையில், ‘கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல் ஏதாவ தொரு கட்சியின் பின்புலத்துடன் செயல்படுகின்றன. இவர்களது மிரட்டலால் அப்பாவிகள், போலீசாரிடம் பிரச்னையை கொண்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். இக்கும்பல்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்‘ என்றார்.

No comments:

Post a Comment