Sunday, 16 September 2012

பார்வைகள் பலவிதம்..!

AddThis Social Bookmark Button
மைக்கேல் ஏஞ்சலோ ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.
ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சியுடன் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற ஏஞ்சலோ, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான இயேசுநாதர் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலை யைப் பெற்றுக் கொண்டார்.
மைக்கேல் ஏஞ்சலோவை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
அதற்கு ஏஞ்சலோ, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் தாங்கள் கொடுத்த கல்தான் இது' என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
'ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார் வையில் இயேசு நாதரைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த இயேசுநாதர் வெளிப்பட்டுவிட்டார்!' என்றார்.
இதைத்தான் பார்க்கும் கோணம் – Focus என்கிறோம்
உயர்வும் தாழ்வும் அங்கு கிடந்த கல்லில் இல்லை அதைப் பார்த்த மனத்தின் கோணத்தில் தான் இருந்தது. கடைக்காரர் பார்வையில் அது தடைக்கல். சிற்பியின் பார்வையிலோ அது அவரை உயர்த்த வந்த படிக்கல்.
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எந்த நிகழ்ச்சியும் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தே உயர்வாகவோ, தாழ்வாகவோ மாறும். எரிச்சலுடன் ஏனோதானோவென்று சந்தித்த பல நபர்களின் வாழ்வில் மகத்தான் திருப்பங்களை உருவாக்கிய சிலர் மாமனிதர்களாக இருந் துள்ளனர்.
விழிப்புணர்வுடன் இருந்து, விருப்பு வெறுப்பின்றி எதையும் சரியான கோணத்தில் பார்க்கும் மனப்பக்குவம் பெறவேண்டும். அதைப் பெற்று விட்டால் வாழ்க்கை நமக்கு வழங்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை உயர்த்த வரும் வாய்ப்பாய், வரமாய்த் தெரியும். இல்லையேல் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் எரிச்சலும் துன்பமுமாய்த் தெரியும்.
தனக்கு என்று எதைப்பார்த்தாலும் மனம் நமக்குத் துணைய்ச் செயல் படும். மற்றவர்களுக்கு என்று எதைப் பார்த்தாலும் மனம் நமக்கு எதிர்ப் பாய்ச் செயல்படும். நம் மனதை எதிர்ப்பாய் நினைப்பதையும் செயல்படுவதையும் அனுமதித்தால் வாழ்வில் எல்லாமே நமக்கு எதிரானவையாக தோன்றும். எனவே, பார்க்கும் கோணத்தை மாற்றுவோம்; வாழ்வில் வெற்றிகளைப்பெறுவோம்.
இந்தக் குறிப்பினை Kanaga Gnana அவர்களின் பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் காணக்கிடைத்தது. அவரது தளத்தில் மேலும் பல தகவல்களுடன், இந்தியாவில் மேற்கொள்ளப்படும், சூரிய ஒளி மின்சாரம் குறித்த பல தகவற்குறிப்புக்களும், இணைப்புக்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment