Sunday, 23 September 2012

1,300 அடி உயர கட்டடத்தில் ஏறி பிரான்ஸ் "ஸ்பைடர் மேன்' சாதனை

பீஜிங்: சீனாவில், 1,300 அடி உயர கண்ணாடி கட்டடத்தில் ஏறி, பிரான்ஸ், "ஸ்பைடர்மேன்' புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலென் ராபர்ட், 50, உலகின் உயரமான கட்டடங்கள் மீதேறி, சாதனை படைப்பதே இவரது பொழுது போக்கு. கயிறு, பாதுகாப்பு சாதனம் எதுவுமின்றி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களில், ராபர்ட் ஏறி உள்ளார். இதனால், "ஸ்பைடர்மேன்' என்ற சிறப்பு பெயரும், இவருக்கு உண்டு. மிகவும் சவால் நிறைந்த கட்டடமாக கருதப்படும், சீனாவின் செங்சோ நகரில் உள்ள, 1,300 அடி உயரம் கொண்ட, "போர்டலேசா டவர்' ராபர்ட்டின் அடுத்த குறியாக இருந்தது. இக்கட்டடத்தின் முதல், 400 அடிக்கு மேல், பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் கூடிய கண்ணாடி மற்றும் உலோகத்தாலான வெளிப்புறச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கை, கால்களை ஊன்றக்கூடிய வகையில், பிடிமானம் சற்றும் இல்லாததால், இந்த கட்டடத்தின் மீது ஏறுவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால், வேறு வழியின்றி, கண்ணாடி சுவரில், சில சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கயிறு போன்றவற்றின் துணையோடு, ராபர்ட், கட்டடத்தின் மீது ஏற ஆரம்பித்தார். முதல், 400 அடியை சிரமமின்றி ஏறி முடித்த ராபர்ட், பின், மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, இரண்டு மணி நேரத்தில் உச்சியை சென்றடைந்தார். அங்கே, அவருக்காக காத்திருந்த வரவேற்பு குழுவை சேர்ந்தோர், கைதட்டி ஆரவாரம் செய்து, ராபர்டை வரவேற்றனர். ராபர்ட்டின் சாகசத்தை, சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ராபர்ட், சீனாவில், இதற்கு முன், 2007ல், ஷாங்காய் மாகாணத்தில் உள்ள, 1,400 அடி உயரம் கொண்ட, ஜின் மாவ் டவரில் ஏறி சாதனை படைத்தார். கடந்த மார்ச்சில், துபாயில் உள்ள, உலகின் மிக உயர்ந்த கட்டடமான, "புர்ஜ் கலிபா' டவர் மீது ஏறி, உலக மக்களின் கவனத்தை கவர்ந்து பாராட்டு பெற்றார். 2, 716 அடி உயரம் கொண்ட இக் கட்டிடத்தின் மீது, ராபர்ட் ஏறும் போது, பயங்கர பாலைவனக்காற்று வீசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment